நாடு முழுவதும் நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 12 மையங்களில் 7,630 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஜீனத்நிஷாபேகம்(34) சமது பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக சென்றுள்ளார். அவரை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து நிஷாவின் கணவர் அப்துல்அஜீஸ் கூறியதாவது, எங்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. எனது மனைவி பி.எஸ்.சி தாவரவியல், எம்.எஸ்.சி பயோஇன்பர்மேட்டிக்ஸ் படித்து முடித்துள்ளார். திருமணத்திற்கு முன்பே நீட் தேர்வு எழுத ஆசைப்படுவதாக அவர் கூறினார். அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு அழைத்து வந்தேன். தேர்வினை சிறப்பாக எழுதியதாக நிஷா கூறியுள்ளார். நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வாகினால் நிச்சயமாக மருத்துவம் படிக்க வைப்பேன் என அவர் கூறினார்.