பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் கான்ஸ்டபிள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னாவில் காவல் நிலையத்தில் புதியதாக பெண் காவலராக பணியில் இணைந்தவர் சோபா குமாரி.  இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு ஒரு மகள் உள்ளார்.  இந்த வேலைக்கு வருவதற்கு முன்பாக தனது கணவர் ஜெகனாபாத் பகுதியில் நடத்தி வந்த பயிற்சி பட்டறை ஒன்றில்,  வகுப்புகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.  கடுமையாக படித்து காவல் துறையில் சேர்ந்த அவர்,  பின்னாளில் பணி சுமை காரணமாக எப்போதும் பிஸியாக இருந்துள்ளார்.  இதனால் அவரால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியவில்லை.

இதனால் கணவன் மனைவி இருவர்களிடையே மன உளைச்சல் ஏற்பட, அது பல நாட்களில் சண்டையாக மாறியுள்ளது. இது தொடரவே,  ஆத்திரமடைந்த கணவர் பெண் கான்ஸ்டபிள் சோபா குமரி அவர்களை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அங்கே கொடூரமாக கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார்.  இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள சோபா குமாரியின் கணவரை தற்போது காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.