கடலூர் மாவட்டத்திலுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தில் சரவணன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி(22) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம் சரவணன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கண்மணி கடந்த 23-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்மணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த கண்மணியின் பெற்றோர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கண்மணியின் தந்தை சேகர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.