கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணார பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுசீத்ரா(29) சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுசீத்ராவுக்கும் இன்ஜினியரான ரகுமாறன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ரகுமாறன் உடுமலைப்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக சுசீத்ரா தனது பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுசீத்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பிரகாஷ் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் ரகுமாறன் சுசீத்ரா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி செல்போனில் வீடியோ கால் செய்து தொந்தரவு அளித்துள்ளார். இதனால் தான் சுசீத்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும், ரகுமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.