கடலூர் மாவட்டத்தில் உள்ள வடவாற்றில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு(60) என்பது தெரியவந்தது.

இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கோவிந்தராசு காட்டுமன்னார்கோவிலுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவரை போலீசார் சடலமாக மீட்டனர். எனவே கோவிந்தராசு தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.