தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் விவசாயியான குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரவேல் தனது சொத்தை மகனுக்கும் மகனுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தங்கைக்கு கொடுக்கப்பட்ட சொத்திலும் பங்கு கேட்டு பிரகாஷ் தனது தந்தையுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் குமரவேல் தனது மகனை கொடுவாளால் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதற்கு குமரவேலின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குமரவேல், அவரது மனைவி கோவிந்தம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் குமரவேல் தனது மகனை ஓட ஓட விரட்டி வெட்டிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.