கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் ரகுவரனுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் வருகிற 10- ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை கொடுத்து திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் இறந்துவிட்டார். இதனால் ரகுவரன் தனது தாயுடன் சேர்ந்து திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருமண செலவுக்கு போதிய பணம் இல்லாததால் தனக்கு தெரிந்தவர்களிடம் ரகுவரன் கடன் கேட்டுள்ளார். ஆனால் யாரும் கடன் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரகுவரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுவரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.