கடலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் குடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை இளங்கோவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல் ரங்கசாமி என்பவர் பாளையம் மாரியம்மன் கோவில் அருகே லாரியை ஓட்டி வந்தார். இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் இளங்கோவன் ஓட்டி சென்ற டிராக்டரும், ரங்கசாமி ஓட்டி சென்ற லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி ரங்கசாமி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் 30 நிமிடங்களுக்கு மேலாக போராடி ரங்கசாமியை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.