கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மங்களூரில் தங்கி இருந்து மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜதுரை பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பிறந்தநாள் விழாவை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடிவிட்டு நள்ளிரவு நேரத்தில் வேலைக்காக ராஜதுரை மோட்டார் சைக்கிளில் மங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் வெங்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜதுரையின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.