கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பிச்சாவரம் மேட்டு தெருவில் கோபாலசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் இருக்கும் வங்கி அருகே பண நுங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் குடிபோதையில் நுங்கு சாப்பிட சென்றபோது கோபாலசாமிக்கும் ராஜேஷுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜேஷ் நுங்கு வெட்ட வைத்திருந்த அரிவாளால் கோபாலசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து முன்பு பாய்ந்தார்.

இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே காயமடைந்த கோபாலசாமிக்கு சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.