கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் அகிலா(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனால் அகிலா தனது ஜாதகத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது அவர் அகிலாவின் ஜாதகத்தை பார்த்து உங்கள் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது. நீங்கள் பரிகார பூஜை செய்ய வேண்டும். வீட்டிலிருந்து ஒரு தட்டை எடுத்து வாருங்கள் என தெரிவித்தார். பின்னர் அகிலா அந்த ஜோதிடர் கேட்ட பொருட்களை எடுத்து கொடுத்தார்.

பரிகார பூஜை செய்யும் போது கழுத்தில் தங்க நகைகள் அணிந்திருக்கக் கூடாது அதனை கழற்றி தட்டில் வையுங்கள் என கூறினார். இதனை நம்பி அகிலா 3 பவுன் தங்க சங்கிலி கழற்றி தட்டில் வைத்தார். இதனையடுத்து ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வருமாறு வாலிபர் தெரிவித்தார். அப்போது சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் அந்த வாலிபர் நகையுடன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அகிலா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.