சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு போர்ச்சு கீசியர் தெருவில் அருண்குமார்- சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து மகாலட்சுமி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டி பணத்தை இழந்துவிட்டார்.

இதனை அறிந்த சாந்தி குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போது பணத்தை கட்டி இழந்து விட்டாயே? என கூறி தனது மகளை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகாலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.