மதுரையில் உள்ள மாடக்குளம் மெயின் ரோட்டில், எஸ்.எஸ்.காலணியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது. அதை மறித்து   போலீசார் விசாரித்ததில், அவர் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல்மணி என்ற மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. உடனே அந்தக் காரை சோதனை செய்யும்படி சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து கூறியுள்ளார். இந்நிலையில்  சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, மணிகண்டன் மீது பல வழக்குகள் பதிந்துள்ளார்.

இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து தனது காரை சோதனை செய்யும்படி அவர் கூறியதால் மணிகண்டன் ஆத்திரம் அடைந்தார். அப்போது இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில்,  ஆத்திரத்தில் மணிகண்டன் தனது காரில் மறைத்து வைத்த அரிவாளை எடுத்து அவரை வெட்ட முயன்றுள்ளார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் விலகியதால் அவர் மீது வெட்டு விழவில்லை. உடனே இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் மணிகண்டனை பிடிக்க முயன்றபோது அவர் அந்த போலீசார் மீது 2 பெட்ரோல் குண்டுகளையும் வீசியதாக தெரிகிறது. அதில் ஒன்று வெடிக்க, மற்றொன்று அருகில் உள்ள புதரில் போய் விழுந்ததால் வெடிக்கவில்லை.

இதையடுத்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் அந்த இடத்திற்கு போலீசார் வந்தனர். பின் தப்பி சென்ற மணிகண்டனை வலைவீசி தேடியபோது, எஸ்.எஸ்.காலனி புதுவாழ்வு நகர் பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.  உடனே போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த கார் மற்றும் அதிலிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.