தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மந்திரி கவுண்டன் கொட்டாய் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி கட்டிட வேலை பார்க்கும் முனிராஜ் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளிர் சுய உதவி குழு மூலம் நாகம்மாள் கடன் வாங்கியுள்ளார். இதனை அறிந்த முனிராஜ் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து கடன் வாங்கிய பணத்திலிருந்து செலவுக்கு பணம் தருமாறு கேட்டார்.

ஆனால் நாகம்மாள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முனிராஜ் தனது மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் காயமடைந்த நாகம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.