திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குளத்துப்பட்டியில் விவசாயியான ராமசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தார். இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்ற ராமசாமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் வயலில் இருந்தவர்கள் ராமசாமியை தேடி அவரது தோட்டத்திற்கு சென்றபோது கிணற்றில் அவர் சடலமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமசாமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தது தெரியவந்துள்ளது.