ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக விக்னேஷ் கார்த்திக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜோதி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விக்னேஷ் கார்த்திக் ஜோதியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் விக்னேஷ் கார்த்திக் தனது மனைவி ஜோதி, தாய், தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜோதியின் தந்தை பால்ராஜ், தாய் துளசியம்மா, 16 வயது சிறுவன் ஆகியோர் உள்ளே நுழைந்து விக்னேஷ் கார்த்திக் முகத்தில் மிளகாய் பொடி தூவி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறி சத்தம் போட்டதால் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த விக்னேஷ் கார்த்திக் தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பால்ராஜ், துளசியம்மா, 16 வயது சிறுவன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.