கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் லிடியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் லிடியா வீட்டிற்கு செல்வதற்காக வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் இருந்து கூட்டப்புள்ளி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய லிடியா டிக்கெட் எடுப்பதற்காக தனது கைப்பையை திறந்து பார்த்தார்.

அப்போது கையில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதை கண்டு கதறி அழுதார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ லிடியாவின் கைப்பையில் இருந்த பணத்தை அபேஸ் செய்துள்ளனர். இதற்கிடையே பேருந்து கோட்டார் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து போலீசார் பேருந்தில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஆனால் யாரிடமும் பணமில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.