நீலகிரி மாவட்டத்தில் உள்ள காளவாய் பகுதியில் ரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரியாஸ் தனது நண்பரான மேத்யூ என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மிஷன் காம்பவுண்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேத்யூவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.