ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் நஞ்சுண்டப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் ஆவார். இந்நிலையில் பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக சந்தோஷும் அந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சந்தோஷ் தனது நண்பரான காந்தன் என்பவருடன் அந்த பெண் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று அவரை வெளியே வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி அந்த பெண் வெளியே வந்ததும் சந்தோஷ அவருடன் வாக்குவாதம் செய்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தோஷையும், காந்தனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.