சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம் மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு முருங்கப்பட்டியில் வசிக்கும் அமுதவள்ளி, அவரது கணவர் கணேசன் ஆகியோர் வருவாய் துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தனர். இதனை நம்பி அவர்களிடம் 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளேன். இதேபோல் நம்பிக்கையின் பேரில் சிலர் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து அமுதவள்ளியும், கணேசனும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வேலை பார்க்க பணி ஆணையை கொடுத்தனர். ஆனால் அந்த பணி ஆணைகள் போலியானது என்பது தெரியவந்தது. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டோம். அப்போது பணத்தை தர மறுப்பு தெரிவித்து கணவன், மனைவி இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் அமுதவள்ளி, கணேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.