திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலைகளில் சுற்றித்திரிந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அந்த நபரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் நேற்று முன்தினம் சேர்த்தனர். இதுகுறித்து வாட்ஸ் அப் குழுவிலும் பகிரப்பட்டது.

இந்நிலையில் போலீசாரால் மீட்கப்பட்ட நபர் தர்மபுரி மாவட்டம் வி.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கௌரவன் என்பது தெரியவந்தது. கடந்த 5-ஆம் தேதி கௌரவன் காணாமல் போய்விட்டார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து விவரத்தை கூறினர். பின்னர் போலீசார் காப்பகத்தில் இருந்து கௌரவனை வரவழைத்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.