தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு, வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக ஊடக செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பாஜக அரசு தடுக்க தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய பாஜக அரசும் மகளிருக்கு எதிரான இக்கொடுமைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியது.

மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், கழக தலைவருமான தளபதி அவர்கள் தனது கண்டனத்தையும் கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார்.இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சை பதற வைக்கும் கொடுமையை கண்டித்து வரும் 23.07.2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணி அளவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தொடர்ச்சியாக 24/07/2023 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்ட கழக செயலாளர்கள் மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளது.