மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவில் பல நாட்டு விமானங்களும் இங்கு வந்து செல்லும் வகையில் அமைக்கபட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின், விமான சேவை மேலும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான விமானங்கள்  மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக மாற உள்ளது. இதன் மூலம் சர்வதேச முதலீடு அதிகளவில் கிடைக்கும்.

ஆகவே அதற்கான ஆயத்த பணிகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி தேதி குடியரசு தினம், கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் விமான நிலையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விமானத்தின் உள் மற்றும் வெளி வளாகங்களில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு வருகிற 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு, இங்கு வரும் அனைத்து வாகனங்களையும், நுழைவு வாயில் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையடுத்து வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள்  முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, விமான நிலையம் முழுவதும் பல வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டது, கடந்த ஆண்டுகளை விட  இந்த ஆண்டு மிகச் சிறப்பாக உள்ளது. இது மிகப்பெரிய வரவேற்பை விமான பயணிகளிடையே பெற்றுள்ளது.