வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் என்ற கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தீ அணைப்பு, மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்திருந்தனர். மேலும் ஓடுபாதையின் இருபுறங்களில் சவுக்குக் கம்புகளை வைத்து  தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இவ்விழாவினை காண மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதையடுத்து முதல் பரிசு 1 லட்சம் ரூபாயும், 2-ஆம் பரிசாக 80 ஆயிரம் ரூபாயும், 3-ஆம் பரிசாக 65 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் 60 பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்   விழா ஏற்பாடுகளை செய்தனர்.

மேலும் இந்நிகழ்வில் போட்டிகளுக்காக 148 மாடுகள் கொண்டு வரப்பட்டன. அதில் 4 மாடுகளை தவிர 144 மாடுகள் போட்டிகளில் கலந்து கொண்டன. இந்த போட்டிகளைக் கண்காணிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் சங்கர், வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள், கால்நடைத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த போட்டிகளில் சீறிப்பாய்ந்து ஓடியதில் மாடுகள் முட்டியதால் 36 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் 31 பேரை அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.