வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக வேலூர் கோட்டை உள்ளது. இவ்விடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வரலாற்று சின்னமாக திகழும் இந்த கோட்டையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒருபகுதியாக  இக்கோட்டையில் ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளது.

எனவே இதற்கு பெரிய அளவிலான புரஜெக்டர் பயன்படுத்தப்பட உள்ளதால், இதற்கான புரஜெக்டர் பாதுகாப்பு அறையானது பெரியார் பூங்கா அருகே கட்டப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளதாவது,
இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3டி நிகழ்ச்சியானது, சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம் செலவில்  கொண்டுவரப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தின் வரலாற்று சார்ந்த நிகழ்வுகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் 3டி முறையில் நிகழ்ச்சிகளாக, கோட்டையின் மதில்சுவரில் திரையிட  உள்ளனர். அந்த வகையில் சீனா, ஜப்பானை தொடர்ந்து இந்தியாவில் இந்த கோட்டையில் தான் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளை சுமார் 200 நபர்கள் ஒரு நேரம் அமர்ந்து  காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் வட மாநிலத்தவர்களும் இக்கோட்டையின் பெருமையை தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலும், தத்ரூபமாகமும் திரையிடப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.