நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா போன்ற பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடு கூடலூருக்குள் வந்த காட்டு யானை, அந்த பகுதியில் வசிக்கும்  வசந்தகுமாரி என்பவரின் வீட்டு மதில் சுவரை இடித்து தள்ளியது. மேலும் இவை கடந்த சில வாரங்களாக குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதால், மக்கள் அச்சமடைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது.

இவ்வாறு பொதுமக்கள் புகார் தெரிவித்த பின் அங்கு வந்த வனத்துறையினர், சேதமடைந்த சுவரை பார்வையிட்டனர். பின் காட்டு யானைக்கு மிகவும் பிடித்தமான பாக்கு, வாழை போன்ற விவசாய பயிர்களை வீட்டின் அருகே வளர்க்கக்கூடாது. அவ்வாறு பராமரித்து வரும் பயிர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதால், பொதுமக்களும்  தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த வாழைகளை வெட்டி அகற்றினர்.