புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓலைமான்பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் பிற போலீசார் அங்கு சென்றனர். அப்போது தங்கராஜ் என்பவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி பேசியுள்ளார். இதனையடுத்து போலீசார் தங்கராஜை பிடிக்க முயன்றனர்.

அப்போது தங்கராஜ் அருகில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த குழம்பை சட்டியுடன் எடுத்து போலீசார் மீது ஊற்றியுள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜுவின் இடுப்பிற்கு கீழ் காயம் ஏற்பட்டது. மேலும் போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் என்பவரை தங்கராஜ் எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.