விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் விளையாடாதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தப் போட்டியில் அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டார்.
BCCI, did someone forget to tell Ishan Kishan that he has a “niggle” and should be resting instead of doing everything on the field?😭😭@ishankishan51 #IshanKishan pic.twitter.com/Byku4khlmg
— Ishan’s🤫🧘🧡 (@IshanWK32) January 28, 2026
இஷான் கிஷனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இடம்பெறவில்லை என்று டாஸ் நிகழ்வின் போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்தார். ஆனால், போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இஷான் கிஷன் மைதானத்தில் மிகவும் வேகமாக ஓடிச் சென்று சக வீரர்களுக்குத் தண்ணீர் வழங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காயம் காரணமாக விளையாடாத ஒருவர் எவ்வாறு இவ்வளவு வேகமாக ஓட முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ள ரசிகர்கள், இஷான் கிஷன் குறித்து சூர்யகுமார் யாதவ் பொய் சொன்னாரா என விவாதித்து வருகின்றனர். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நேரலை வர்ணனையின் போது இது குறித்துத் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இஷான் கிஷன் மைதானத்தில் ஓடுவதைப் பார்த்தால் அவருக்குக் காயம் இருப்பது போல் தெரியவில்லை என்றும், ஒருவேளை அவருக்கு காலணிகளில் ஏதேனும் சிக்கல் இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஷான் கிஷனின் துரிதமான செயல்பாடுகள் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதை உணர்த்துவதாகக் கூறிய அவர், அடுத்த போட்டியில் இஷான் கிஷன் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இந்திய அணி இந்தப் போட்டியில் ஐம்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இஷான் கிஷன் நீக்கம் தொடர்பான இந்த சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
