நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். தற்போது அந்தப் பெண் தனது வீட்டில் இருந்து வெளியேறி காதலன் தினேஷ்குமார் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள்  தங்களது வீட்டிற்கு அழைத்து சென்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில்  இரு குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில்  பெண்ணின் உறவினர்களான சோமசுந்தரம்(52), அவரது மகன் மைக்டைசன்(29) மற்றும் மைக்டைசனின் நண்பர் அமீர் பாஷா மகன் அப்துல் சலாம்(29) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தினேஷ் குமாரை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த தினேஷ்குமாரின் அண்ணன் ஐயப்பன்(27) அவர்களை தட்டி கேட்டுள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த மைக்டேசன் அருகே இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஐயப்பனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் பிரச்சனையில் வாலிபரை  கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.