நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த மூன்று நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 66.2 டிகிரியாகவும் இருக்கும். அதேபோல் காற்று மணிக்கு நான்கு கிலோமீட்டர் 4 கிலோ மீட்டர் மற்றும் 6 கிலோ மீட்டர் வேகத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வீசும். சிறப்பு வானிலையை பொருத்தமட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும். கோடை காலங்களில் பொது அளவு பசுந்தீவனங்கள் கிடைக்காத போது ஹைட்ரோபோனிக் பசுமை குடில்  முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல் கால்நடைகளை கோடை வெப்பத்திலிருந்து காப்பதற்காக நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள் மற்றும் மர நிழல்களில் அவற்றை பராமரிக்க வேண்டும். கொட்டகையில் மேற்கூறையின் மீது தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி அதன் மீது தண்ணீர் தெளிப்பதன் மூலமாக வெப்ப தாக்கத்திலிருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறையில் 5 முதல் 7 நாட்களில் சுமார் ஐந்து மடங்கு வரை மக்காச்சோள பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய வேண்டும். கரவை பசு மாடுகளில் ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிராம் எனும் அளவில் அடர் தீவனத்துடன் தானுவாஸ்  தாது உப்பு கலவையினை அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.