திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில்  வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 24 மணிநேரமும் காவலாளிகளை  நியமிக்கப்பட வேண்டும். மேலும் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறம், பின்புறம் என அனைத்து திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பழுதடைந்த கேமராக்கள் இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்து பொருத்த வேண்டும்.

இதற்கு முன்னிலை வகித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசியுள்ளதாவது, ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ கேமராக்களை ஏ.டி.எம். மற்றும் வங்கியின் அறைகளில் பொருத்த வேண்டும். இதன் மூலம் எதிர்பாராத வகையில் நடக்கும் குற்ற சம்பவங்களில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய முடியும். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனே அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்  நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அலாரம் ஒன்றை பொருத்துவதன் மூலமும்,  மேலும் சந்தேகப்படும் நபர்கள் குறித்து 94429 92526 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.