வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமுலுபட்டி பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழிலரசன்(35) தங்கபாண்டியன்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இதில் எழிலரசன் அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளிய மரங்களை வெட்டியுள்ளனர். அதே நேரம் ஈரோடு மாவட்டத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் புளிய மரத்திலிருந்து கட்டைகளை வெட்டி கீழே போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி எழிலரசன், தங்கபாண்டியன் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே எழிலரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த எழிலரசனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.