நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கர்நாடகா கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களது சொந்த காரில் கூகுள் மேப் உதவியுடன் நீலகிரிக்கு சுற்றுலா வந்து விட்டு மீண்டும் கூகுள் மேப் உதவியுடன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். கூகுள் மேப் காட்டிய வழியை பின் தொடர்ந்து சென்ற நிலையில் திடீரென வழியில் படிகட்டுகள் வந்ததால் கார் ஓட்டுநர் செய்வதறியாது முழித்துள்ளார்.

பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உதவியுடன் படிக்கட்டுகளில் கற்களை அடுக்கி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் சாலைக்கு கொண்டு வரப்பட்டது அதன் பிறகு மீண்டும் கர்நாடகா இளைஞர்கள் தங்கள் பயணத்தை தொடங்கினர்.