டெல்லி ஜகத்பூர் பகுதியில் மழைநீரில் மூழ்கிய சாக்கடையில் விழுந்த மூன்று பள்ளிச் சிறுவர்களை, அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக, ஜகத்பூர் பகுதியில் உள்ள சாலைகளில் பெருமளவில் மழைநீர் தேங்கியிருந்தது. அதேநேரத்தில், அருகே இருந்த கழிவுநீர் சாக்கடைகளும் நிரம்பி வழியத் தொடங்கின. இதனால் சாலை எது, சாக்கடை எது என்று அடையாளம் காண முடியாத அளவுக்குப் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்திருந்தது.

அந்த வழியே நடந்து சென்ற மூன்று பள்ளிச் சிறுவர்கள், தண்ணீர் தேங்கியிருந்த சாலையின் ஆபத்தை அறியாமல் நடந்து சென்றுள்ளனர். அப்போது, திறந்திருந்த சாக்கடையைக் கவனிக்காமல் எதிர்பாராதவிதமாக மூன்று சிறுவர்களும் அதற்குள் தவறி விழுந்தனர்.

சிறுவர்கள் சாக்கடையில் விழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாக்கடைத் தண்ணீருக்குள் மூழ்கிய சிறுவர்களைச் சாதுரியமாகச் செயல்பட்டு உள்ளூர் மக்கள் பத்திரமாக வெளியே மீட்டனர்.

“>

மக்கள் உடனடியாகச் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, சிறுவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். மழைக்காலங்களில் திறந்திருக்கும் சாக்கடைகளை மூடி, ஆபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.