கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் வெங்கடாபுரம் பகுதியில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. அந்த சத்தம் கேட்டு வெளியே வந்த கணேஷ் குமார் தெருநாய்களை விரட்டி அடித்தார். பின்னர் பட்டிக்குள் சென்று பார்த்தபோது 10 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் காயமடைந்த இரண்டு ஆடுகள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அதிகாரி, சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு இறந்த ஆடுகள் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.