சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான சுரேஷ்குமார் தேனாம்பேட்டையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக சகோதரனின் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையார் எல்.பி சாலை வழியாக சென்ற போது காரில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை பார்த்த பாபுவும், சுரேஷ்குமாரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.