கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினங்குடி புது காலணியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 4 மாதமே ஆன அஸ்விகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று திடீரென குழந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் உறவினர்களான தங்கமணி, ரம்யா, ஆனந்தி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் குழந்தையை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் கற்பகவள்ளி உறவினர் ஒருவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வதிஷ்டபுரம் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கமணி, ரம்யா, ஆனந்தி, அஷ்விகா ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அஸ்விகாவை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.