கடலூர் மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி சத்துணவு கூட்டத்தில் மாணவர்களுக்காக சமையல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சமையல் பணியாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை அணைக்க இயலவில்லை.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததும் மாணவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.