நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜன், கிஷோர் குமார் ஆகியோர் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதே போல் பிங்கர் போஸ்ட், மஞ்சகொம்பை பகுதியில் இருக்கும் இரண்டு கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.