திருச்சி மாவட்டத்தில் உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு தேவ்(2) என்ற மகன் இருந்துள்ளான். நேற்று காலை மணி தனது மனைவி, மகன் உறவினர்களான எல்லம்மாள், சுகன்யா ஆகியோருடன் திருச்சியில் இருக்கும் உறவினர் வீட்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் சேலத்தை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவர் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் புலிவலம் அருகே சென்றபோது சந்தானகிருஷ்ணனின் காரும், மணியின் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணியும், விஷ்ணுதேவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரண்யா உட்பட 4 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.