கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கரூடோகோடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் முனீர் என்பவருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே கிடந்த ஒரு மோதிரத்தை எடுத்து விழுங்கியது. இதனால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மோதிரத்தை அகற்றினர். அதன் பிறகு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது.‌ ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதை பார்த்து குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.