கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து விருதாச்சலம் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக ஏறிய பயணியிடம் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த குறிஞ்சிப்பாடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாச்சலம் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட ஓட்டுனரும், நடத்துனரும் பயணியிடம் தகாத வார்த்தையால் பேசியது உறுதியானது. இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாச்சலம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.