விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியின் முன் அச்சு கழன்று கட்டுப்பாட்டை இழந்த லாரி சிக்னலில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.