கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குபாளையம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வசந்தகுமாரும் அதே ஊரில் வசிக்கும் லாரி டிரைவரான கருணா (28) என்பவரும் மதுபாட்டில் வாங்கி திருப்பாச்சனூர் பகுதிக்கு சென்று மது குடித்தனர். அதன்பிறகு போதை தலைக்கேறியதும் கருணா பொது மக்களிடம் தகராறு செய்துள்ளார்.

இதனை தடுக்க முடியாததால் வசந்தகுமார் கருணாவின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த கருணா வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று எனது வாகனத்தை நீ எப்படி எடுத்து வரலாம்? என கேட்டு அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த வசந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.