திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி மலையாளி வாரத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் உடலை கைப்பற்றி இடையக்கோட்டை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கால்நடை டாக்டர் மணிகண்டன் மானின் உடலை பரிசோதனை செய்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, இறந்து கிடந்தது 2 வயதுடைய பெண் புள்ளிமான். தண்ணீர் குடிக்க வந்த போது தவறி விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு புள்ளி மான் இறந்துவிட்டது. அதன் உடலை வனப்பகுதியில் புதைத்து விட்டோம் என கூறியுள்ளனர்.