சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களது மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கத்திற்கு அடிமையான தேவேந்திரன் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பணம் 3 லட்சத்தை கையாடல் செய்து முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக தனியார் நிறுவனத்தினர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது தேவேந்திரனின் பெற்றோர் பணத்தை விரைவில் ஒப்படைத்து விடுகிறோம் என போலீசில் உத்தரவாதம் அளித்தனர். இதற்கிடையே தேவேந்திரன் தலைமறைவாகிவிட்டார். இதனால் பணத்தை கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி தனது வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.