சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2:15 மணிக்கு கீரனூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த மர்ம நபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அதே சமயம் ரயில் வருவதை பார்த்ததும் அவர் சைக்கிளை தண்டவாளத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். சில நொடிகளில் ரயில் சைக்கிள் மீது மோதியது. மேலும் என்ஜின் முன்பகுதியில் ரயில் சிக்கிக் கொண்டு அதன் உதிரி பாகங்கள் ஆங்காங்கே விழுந்தது.

இதனை பார்த்த இன்ஜின் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தி விருதாச்சலம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் சைக்கிளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் சைக்கிளை எடுக்க இயலவில்லை. இதனால் 2:45 மணிக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு பூவனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் என்ஜினில் சிக்கிய சைக்கிளை அகற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.