ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது மைலம்பாடி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் திருமண தகவல் மையம் மூலம் எனது மகனுக்கு பெண் பார்த்து கொடுப்பதாக கூறி அறிமுகம் ஆனார்கள். அவர்கள் சென்னையில் தங்களுக்கு தெரிந்த உயர் அதிகாரிகள் மூலம் எனது மகனுக்கு மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தனர்.

அதற்காக முன் பணமாக 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டனர். அவர்களை நம்பி 2 தவணைகளாக நான் 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். ஆனால் அவர்கள் எனது மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதே போல கே.ஏ.எஸ் நகரைச் சேர்ந்த மலர்கொடி என்பவரும் தன்னிடம் 2 லட்ச ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக தம்பதியினர் மீது புகார் அளித்தார். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.