சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன புதூர் மாரியம்மன் கோவில் விழா கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற போது குடிபோதையில் அதே பகுதியில் வசிக்கும் மகுடேஸ்வரன், ராமு ஆகிய இரண்டு பேர் பெண்களை கிண்டல் செய்துள்ளனர். இதனை கோவில் தர்மகர்த்தா வெற்றிவேல் உள்பட சிலர் தட்டி கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இரண்டு பேரும் வெற்றிவேலை அரிவாளால் வெட்டினர்.

இதில் காயமடைந்த வெற்றிவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மகுடேஸ்வரன், ராமு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நடைபெற்ற போது ராமு இறந்து விட்டார். இந்நிலையில் கோவில் தர்மகர்த்தாவை வெட்டிய மகுடேஸ்வரனுக்கு நீதிபதி 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.