திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியங்காடு பகுதியில் ஜெகநாதன்(66)- பாக்கியலட்சுமி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கௌதம்(31) என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் சிங்காநல்லூரில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் ஜெகநாதனும், அவரது மனைவியும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் கௌதமும் சென்றனர்.

அவர்கள் திருச்சி- கோவை சாலையில் சிந்தாமணி புதூர் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி ஜெகநாதன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாதனும், பாக்கியலட்சுமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்து கௌதம் கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ஜெகநாதன் மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.